லக்னோ,
தமிழகம், மேற்கு வங்காளம், கேரளா, உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடைபெற்றது. இதில், தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்தில் 97 லட்சத்து 37 ஆயிரம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
தமிழகத்தை போன்றே உத்தரபிரதேசத்திலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடைபெற்றது இந்த பணிகள் முடிந்த நிலையில் தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் 2.04 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். அத்துடன் 84 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இறுதியாக தற்போது 13.39 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் கமிஷன் வெளியிட்ட பட்டியலில் கூறப்பட்டு உள்ளது. மாவட்டங்களை பொறுத்தவரை லக்னோ, அதிகமான வாக்காளர்களை (9.14 லட்சத்துக்கும் மேல்) இழந்துள்ளது. அடுத்தடுத்த இடங்களை பிரயாக்ராஜ் (8.26 லட்சத்துக்கும் மேல்), கான்பூர் (6.87 லட்சத்துக்கும் மேல்), ஆக்ரா (6.37 லட்சத்துக்கும் மேல்) மற்றும் காசியாபாத் (5.74 லட்சத்துக்கும் மேல்) மாவட்டங்கள் பிடித்து உள்ளன.
முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி 15.44 கோடி வாக்காளர்கள் இருந்தனர். பின்னர் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்குப்பின் வெளியிடப்பட்ட வரைவு பட்டியலில் 12.55 கோடி வாக்காளர்களின் விவரங்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.