புதுடெல்லி,
ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு சேவை வரி கவுன்சில் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும். ஆனால் நாடு கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் இருந்து மீள்வதற்காக போராடி வருவதால் 3 மாதங்களுக்கு ஒரு முறை இந்தக் கூட்டம் நடத்தப்படவில்லை.
8 மாதங்களுக்கு பின்னர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இது ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 43-வது கூட்டம் ஆகும்.
டெல்லியில் இருந்தவாறு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் காணொலிக்காட்சி வழியாக இந்த கூட்டத்தை நடத்தினார். இதில் நிதித்துறை ராஜாங்க மந்திரி அனுராக் தாக்குர், மாநில நிதிமந்திரிகள், மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
பா.ஜ,க. அல்லாத, ஒருமித்த கருத்துடைய கட்சிகளால் ஆளப்படுகிற 8 மாநிலங்களான ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஷ்கார், தமிழ்நாடு, மராட்டியம், ஜார்கண்ட், கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவற்றின் நிதி மந்திரிகள், கொரோனா வைரஸ் பெருந்தொற்று கால அத்தியாவசியப் பொருட்களான மருந்துகள், தடுப்பூசி, மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றின் மீது விரிவிலக்கு வழங்கக்கோரும் ஒரு கூட்டு உத்தியை வகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்த விவகாரம், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும். அப்போது இந்த பொருட்களுக்கு வரிவிலக்கு வழங்குவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம்.
இது தொடர்பாக ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து மத்திய, மாநில அரசுகளின் வரி அதிகாரிகளைக் கொண்ட பிட்மென்ட் கமிட்டி (பொருத்த குழு) தனது பரிந்துரையை ஜி.எஸ்.டி. கவுன்சிலிடம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது உள்நாட்டு பொருட்கள் மற்றும் தடுப்பூசிகளின் வணிக ரீதியிலான இறக்குமதி ஆகியவற்றுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது, கொரோனா மருந்துகளுக்கும், ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கும் 12 சதவீத வரி விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. இது இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.