புதுடெல்லி,
ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறையை மத்திய பாரதீய ஜனதா அரசு கடந்த 2017-ம் ஆண்டு, ஜூலை 1-ந் தேதி அமல்படுத்தியது.
இதன்படி நான்கு அடுக்குகளின் கீழ் அனைத்துப் பொருட்கள், சேவைகளுக்கும் வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஜி.எஸ்.டி.யின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் வரி வசூல் செய்ய மத்திய அரசு முதலில் இலக்கு நிர்ணயம் செய்தது. ஆனால், அதை விடக் குறைவான அளவில்தான் வரி வசூல் இருக்கிறது. 2019 அக்டோபரில் ரூ.95,380 கோடி மட்டுமே ஜி.எஸ்.டி. வசூலானது.
இந்நிலையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மூலமாக மாதம் ரூ.1.1 லட்சம் கோடி வசூல் செய்ய மத்திய நிதி அமைச்சகம் இலக்கு நிணயித்துள்ளதாக வருவாய் துறை செயலாளரான அஜய் பூஷன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நிதியாண்டின் எஞ்சிய நான்கு மாதங்களுக்கும் இந்த வரி வசூல் இலக்கு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் வரி வருவாய் குறைவாகவும், செலவுகள் அதிகமாகவும் இருப்பதால் நாட்டின் நிதிப் பற்றாக்குறை நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் வருவாயைப் பெருக்கும் நோக்கத்தில் மத்திய அரசு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே புதுடெல்லியில் 38-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை உயர்த்துவது பற்றி ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.