பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து நேற்று இரவு குஜராத்தின் அகமதாபாத்திற்கு இண்டிகோ விமானம் புறப்பட தயாராக இருந்தது.
அப்போது, விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக எழுதப்பட்ட கடிதத்தை பணியாளர்கள் கண்டுபிடித்தனர். விமானத்தின் கழிவறையில் இருந்த கடிதத்தை பார்த்த பணியாளர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, விமானத்தில் இருந்த பணிகள் அனைவரும் கீழே இறக்கிவிடப்பட்டனர். பின்னர், விமானம் முழுவதும் பாதுகாப்புப்படையினர் தீவிர சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் விமானத்தில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து, இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.