தேசிய செய்திகள்

சென்னை நோக்கி வந்த ரெயிலில் தீ விபத்து: பயணிகள் காயமின்றி தப்பினர்

ரெயிலின் ஒரு பெட்டியின் சக்கரத்திலிருந்து புகையும், தீப்பொறிகளும் வெளியேறியது. இதைத்பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்த னர்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து நேற்று இரவு சார்மினார் விரைவு ரெயில் சென்னை தாம்பரம் நோக்கி புறப்பட்டது. இந்த ரெயில் யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு ரெயில் நிலையம் அருகே வந்த போது, ரெயிலின் ஒரு பெட்டியின் சக்கரத்திலிருந்து புகையும் தீப்பொறிகளும் வெளியேறின. இதைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து டிக்கெட் பரிசோதகர் மூலமாக என்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது.இதைத்தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பெட்டியில் பற்றிய தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து சம்பவத்தில் எந்த சேதமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை. இதையடுத்து சார்மினார் ரெயில் மீண்டும் தாம்பரத்திற்குப் புறப்பட்டுச் சென்றது.

இதுகுறித்து தெற்கு மத்திய ரெயில்வே வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “ஐதராபாத்தில் இருந்து புறப்பட்டு தாம்பரம் சென்ற சார்மினார் எக்ஸ்பிரஸ் எஸ்-5 பெட்டியில் பிரேக் சிக்கிக் கொண்டதால் சிறிய தீப்பொறி பரவியது. இதையடுத்து அலேர் ரெயில் நிலையத்தில் ரெயில் நிறுத்தப்பட்டது. பின்னர் சரி செய்யப்பட்டது; ரெயில் தாம்பரம் நோக்கி புறப்பட்டுச் சென்றது” என தெரிவித்துள்ளது.