நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரத்துக்கு 225 பயணிகள் மற்றும் 11 சிப்பந்திகள் என 236 பேருடன் துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தில் தொழிநுட்பக் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், விமானத்தின் வலது என்ஜீனில் தீப்பற்றியிருக்கக் கூடும் என சந்தேகித்த விமானி உடனடியாக கொல்கத்தாவின் சுபாஷ் சந்திர போஸ் விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரினார்.
உடனடியாக அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த விமானம் கொல்கத்தா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து, விமானத்தில் இருந்த 236 பேரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தின் என்ஜீன்களில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பயணிகள் மற்றொரு விமானம் மூலம் பயணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வால் கொல்கத்தா விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.