தேசிய செய்திகள்

கர்நாடகாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்-மந்திரி குமாரசாமி ஆய்வு

கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை முதல்-மந்திரி குமாரசாமி நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குடகு,

கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது, குடகு மாவட்டம். இந்த மாவட்டத்தில் கனமழை இடைவிடாது கொட்டி தீர்த்து வருகிறது. இதன்காரணமாக ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளப்பெருக்கால், பல்வேறு கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

இங்குள்ள முக்கொட்லு, காட்டக்கேரி, ஆலேறி, மக்கந்தூர் ஆகிய கிராமங்களில் பயங்கர மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. மண்சரிவால் ஏற்கனவே குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் ஜோடுபாலா பகுதியில் நேற்று முன்தினம் 6 பேர் மழைவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அவர்கள் 6 பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் கருதுகிறார்கள். இதனால் சாவு எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

குடகு மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவம், கடலோர காவல்படையினர், மாநில மீட்பு குழுவினர், நீச்சல் வீரர்கள், தீயணைப்பு படையினர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய் துறையினர், மின்வாரிய அதிகாரிகள் என 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஈடுபட்டு உள்ளனர்.

குடகு மாவட்டத்தில் ஆபத்தான பகுதியில் சிக்கி தவித்த சுமார் 3,500 பேரை ராணுவத்தினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். மேடான பகுதியில் இருந்தவர்களை ராணுவத்தினர், கயிறு கட்டியும், செயற்கை பாலம் அமைத்தும் பத்திரமாக மீட்டனர்.

இந்த நிலையில் நேற்று முதல்-மந்திரி குமாரசாமி ஹெலிகாப்டர் மூலம் குடகு மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முன்னதாக, மத்திய மந்திரி சதானந்த கவுடாவும் நேற்று மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். மேலும் அவர் மக்களிடம் குறைகளை கேட்டறிந்து கொண்டார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்