திருவனந்தபுரம்,
கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளம் மாநிலம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டு சுற்றுலாபயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். புகழ்பெற்ற இந்த இடத்தைப் பார்க்க சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதில் வால்பாறையை அடுத்த சாலக்குடிக்கு செல்லும் வழியில் உள்ள வனப்பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வெள்ளம் காரணமாக சாலக்குடிக்கு செல்லும் வழியில் உள்ள சார்ப்பா நீர்வீழ்ச்சியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மேலும் காட்டாற்று வெள்ளம் சார்ப்பா நீர்வீழ்ச்சி வழியாக அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்வதால் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. எனவே கேரளமாநில அதிரப்பள்ளி வனத்துறையினரும், போலீசாரும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு தற்போது தண்ணீர் அதிகமாக வருவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்துள்ளனர். அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சியை சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ந்து செல்கின்றனர்.