தேசிய செய்திகள்

சொமாட்டோவை தொடர்ந்து ஸ்விக்கியிலும் கட்டணம் உயர்வு: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

சொமாட்டோவை தொடர்ந்து , தற்போது ஸ்விக்கி நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இந்தியாவில் உணவு டெலிவரி சேவையில் ஸ்விக்கி, சொமாட்டோ போன்ற நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த உணவுகளை, விருப்பமான ஹோட்டல்களில் இருந்து வீட்டிலிருந்தபடியே இந்த செயலிகள் மூலம் ஆர்டர் செய்யலாம். ஆர்டர் செய்த சில நிமிடங்களிலேயே, சுடச்சுட உணவை டெலிவரி பணியாளர்கள் வீட்டிற்கு கொண்டு வந்து கொடுத்துவிடுவார்கள். சென்னை, பெங்களூர், டெல்லி போன்ற பெருநகரங்களில் மட்டும் அல்லாமல், சிறிய நகரங்களிலும் தற்போது சொமாட்டோ, ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள் தங்கள் ஆதிக்கத்தை விரிவுபடுத்தியுள்ளன.

இந்த நிலையில், சொமாட்டோ தனது லாப வரம்பை அதிகரிக்கும் நோக்கில் 'பிளாட்பார்ம் கட்டணத்தை' கடந்த சில தினங்களுக்கு முன்பு உயர்த்தியது. ஒரு ஆர்டருக்கான பிளாட்பார்ம் கட்டணம் ரூ. 12.50-இல் இருந்து ரூ. 14.90 ஆக அதிகரிக்கப்படுவதாக சொமாட்டோ அறிவித்திருந்த நிலையில், தற்போது ஸ்விக்கி நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ரூ.14.99 ஆக இருந்த பிளாட்பார்ம் கட்டணத்தை ரூ.17.58 ஆக உயர்த்தியுள்ளது ஸ்விக்கி.

ஏற்கனவே சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஹோட்டல்கள் உணவு விலையை அதிகரித்துள்ள நிலையில், தற்போது டெலிவரி நிறுவனங்களும் அடுத்தடுத்து கட்டணத்தை உயர்த்தியுள்ளது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.