டெல்லி,
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வரும் நிலையில் 2020ம் ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. சமீபத்தில் டெல்லி அரசுப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் பெண்கள் கட்டணங்கள் இன்றி இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு டெல்லி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து, வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வாடகை வீட்டில் வசிப்பவர்கள் முன்பணம் செலுத்தி மீட்டர்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் இந்த மீட்டரைப் பெறுவதற்கு வாடகை வீட்டில் இருப்பதற்கான ஒப்பந்தத்தின் நகலை ஒப்படைத்தால் போதுமானது என்றும்
டெல்லியில் வசிக்கும் மக்கள், மாதத்திற்கு 200 யூனிட் வரை மின்சாரத்தை பயன்படுத்தினால், அதற்கு கட்டணம் எதுவும் செலுத்தத்தேவையில்லை என்று கடந்த ஆகஸ்டு 1ம் தேதி அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்த பலனை, வாடகை வீட்டில் வசிப்பவர்களும் பெறலாம் என்று திட்டத்தை விரிவுபடுத்தி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மாதம் 200 யூனிட்கள் வரை மின்சாரத்தை பயன்படுத்தும் குடும்பதாரர்கள் கட்டணம் எதுவும் செலுத்தத்தேவையில்லை. 200 யூனிட்டுகளுக்கு மேல் 1 யூனிட் அதிகம் பயன்படுத்தினாலும் மொத்த கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.