புதுடெல்லி
வெளிநாட்டு சக்திகளின் ஊதுகுழல் ராகுல் காந்தி என பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே கடுமையாக விமர்சித்துள்ளார்.
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் கூறும்போது, வெளிநாட்டு சக்திகளிடம் விற்கப்பட்டவர் ராகுல் காந்தி. அவர் ஒரு ஊதுகுழல். அவரை அந்நிய சக்திகள் ஆட்டிப்படைக்கின்றன. அவர் காந்தி குடும்பத்தில் இருந்து வந்தவர். அதனால், அவருக்கு அந்த அந்தஸ்து உள்ளது.
2004 முதல் 2026 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், அவர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஆனால், ஒருவருக்கும் அவருடைய பயணம் பற்றி தெரியாது. அவர் வெளிநாட்டுக்கு செல்கிறார். ஆனால், யாரை சந்திக்கிறார்? என்ன செய்கிறார்? என்பது யாருக்கும் தெரியாது. அவருடைய வெளிநாட்டு பயணத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றார்.
அவருடைய வெளிநாட்டு பயணம் பற்றி சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என அரசை நான் வலியுறுத்துவேன். அவரை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கும்படி கோருவேன். அதற்கான முயற்சிகளை செய்வேன் என்று கூறினார்.
ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணம் பற்றி பா.ஜ.க. பலமுறை கேள்வி எழுப்பியுள்ளது. அவருடைய செலவினங்களும், அறிவிக்கப்பட்ட வருவாயும் முரண்படுகிறது என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது.