மும்பை,
வெளிநாடுகளை சேர்ந்த பலர் தனியாக பல்வேறு நாடுகளுக்கு சென்று தங்கள் பயணத்தை வீடியோவாக எடுத்து யூடியூப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் வெளிநாடுகளை சேர்ந்த பலரும் இந்தியாவில் பயணம் மேற்கொண்டு தங்கள் பயண அனுபவத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
இதனிடையே, வெளிநாட்டை சேர்ந்த பெண் யூடியூபர் இனிஸ் பரியா (Ines Faria) கடந்த 2 மாதங்களாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் இந்திய பயணத்தை தனது யூடியூப் சேனலில் (lost.with.ines) வீடியோவாக பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், இனிஸ் பரியா கடந்த வாரம் மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 2 இளைஞர்கள் இனிஸ் பரியாவுக்கு தொல்லை கொடுத்துள்ளனர். எங்களுடன் போட்டோ எடுத்து கொள்ளும்படி இனிஸ் பரியாவை இளைஞர்கள் வற்புறுத்தியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த இனிஸ் பரியா அங்கிருந்து விலகி செல்ல முயறுள்ளார். ஆனால், இளைஞர்கள் தொடர்ந்து பின்தொடர்ந்து வந்து தொல்லைகொடுப்பதை இனிஸ் பரியா வீடியோவாக எடுத்து தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இனிஸ் பரியாவுக்கு தொல்லை கொடுத்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூகவலைதளத்தில் குரல் எழுந்தது. இந்த சம்பவம் மும்பை போலீசாரின் பார்வைக்கு சென்ற நிலையில் இனிஸ் பரியாவுக்கு தொல்லை கொடுத்த 2 இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தலைமறைவாக உள்ள 2 இளைஞர்களை தேடி வருவதாகவும், விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.