தேசிய செய்திகள்

சாரதா சிட்பண்ட் வழக்கில் கொல்கத்தா போலீஸ் முன்னாள் கமிஷனருக்கு சி.பி.ஐ. சம்மன்

சாரதா சிட்பண்ட் வழக்கில் கொல்கத்தா போலீஸ் முன்னாள் கமிஷனருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. 2-வது நாளாக தலைமை செயலகத்துக்கு சென்று அதிகாரிகள் அதனை வழங்கினர்.

கொல்கத்தா,

சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கை விசாரித்து வந்த கொல்கத்தா போலீஸ் முன்னாள் கமிஷனர் ராஜீவ் குமார் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ராஜீவ் குமாரை கைது செய்ய விதிக்கப்பட்டு இருந்த தடையை ஐகோர்ட்டு நீக்கியதை தொடர்ந்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. தற்போது மாநில போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வரும் ராஜீவ் குமாருக்கு மீண்டும் சம்மன் வழங்க நேற்று முன்தினம் சி.பி.ஐ. அதிகாரிகள் மாநில தலைமை செயலகத்துக்கு சென்றனர். ஆனால் அன்று விடுமுறை தினம் என்பதால் திருப்பி அனுப்பப்பட்ட அவர்கள் நேற்று 2-வது நாளாக மீண்டும் சென்றனர்.

பின்னர், ராஜீவ் குமார் 1 மாதம் விடுப்பு எடுத்திருப்பதற்கான காரணம் என்ன? அவர் தற்போது எங்கே இருக்கிறார்? என்பது குறித்த விவரம் கேட்டு தலைமை செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர்களிடம் கடிதம் அளித்தனர். சாரதா சிட்பண்ட் விசாரணைக்காக நேற்று 2 மணிக்கு ராஜீவ் குமார் ஆஜராக வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்ததாக தலைமை செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT