கர்நாடகத்தில் கடந்த 2023-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்தது.முதல்-மந்திரியாக சித்தராமையா பதவி ஏற்றார். அப்போது அவரிடம் காங்கிரஸ் மேலிடம், 2.5 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அதிகாரத்தை டி.கே.சிவக்குமாருக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கூறியது. இதற்கு சித்தராமையா சம்மதம் தெரிவித்தார். அதன்படி சித்தராமையா ஆட்சி நிர்வாகம் நடத்தி வந்தார். கடந்த ஆண்டு(2025) நவம்பர் மாதத்துடன் சித்தராமையா முதல்-மந்திரி ஆகி2.5 ஆண்டுகளை நிறைவு செய்தார். இதையடுத்து டி.கே.சிவக்குமார், கட்சி மேலிடம் தனக்கு அளித்த வாக்குறுதிப்படி தன்னை முதல்-மந்திரி ஆக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார்.
கட்சி மேலிடம் தலையிட்டு சித்தராமையாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு சித்தராமையா தனது முதல் மந்திரி பதவியில் இருந்து விலக சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, நேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். புதிய முதல் மந்திரியாக டிகே சிவக்குமார் நாளை பதவியேற்க உள்ளார்.
இதற்கிடையே, சித்தராமையா நேற்று இரவு டெல்லி சென்றார். இன்று காலை ராகு காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கேவை சித்தராமையா சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பின் போது, டிகே சிவக்குமார் தலைமையிலான அமைச்சரவையில் தனது மகன் யதிந்திரா சித்தராமையாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பு வழங்க வேண்டும் என்பதையும் உள்ளடக்கிய கோரிக்கைகள் பட்டியலை கட்சித் தலைமையிடம் அவர் வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.