ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடாவின் மனைவி சென்னம்மா (வயது 85). இவர், வயது மூப்பு காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். அதாவதுது மூச்சு திணறல் மற்றும் சிறுநீரக பாதிப்பால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து, பெங்களூருவில் பழைய விமான நிலைய ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 15-ந் தேதி சென்னம்மா அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையில், இன்று காலையில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், வெண்டிலேட்டர் இல்லாமல் சிகிச்சை அளித்து வருவதாகவும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் சத்திய நாராயணா கூறி இருந்தார். அதன்பிறகு, சென்னம்மாவின் உடல் நிலை திடீரென்று மோசமானது. இதற்காக டாக்டர்கள் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
இந்த நிலையில் , இன்று மாலையில் மாரடைப்பால் சென்னம்மா மரணம் அடைந்தார். இதனை ஆஸ்பத்திரி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, மகன்களான மத்திய மந்திரி குமாரசாமி, முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணா மற்றும் குடும்பத்தினர், ஜனதாதளம்(எஸ்) கட்சி தலைவர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். தனது மனைவியின் உடலை பார்த்து தேவேகவுடா கண்ணீர் விட்டு அழுதார்.