சண்டிகர்,
டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை தவிர்த்துவிட்டு, தனது முதுகலைத் தேர்வு எழுதுவதற்காக பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி தேர்வு மையத்திற்குச் சென்றார்.
காங்கிரஸ் கட்சியின் மிக உயரிய முடிவுகளை எடுக்கும் குழுவான காங்கிரஸ் செயற்குழுவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. நாடு தழுவிய அரசியல் சூழல் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விவாதிக்க மூத்த தலைவர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். ஆனால், பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சரண்ஜித் சிங் சன்னி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
அரசியல் காரணங்களுக்காக அவர் இந்த கூட்டத்தைப் புறக்கணிக்கவில்லை என்றும், தனது முதுகலை படிப்பிற்கான பல்கலைக்கழகத் தேர்வை எழுதுவதற்காகவே அவர் டெல்லி செல்லவில்லை என்பதும் பின்னர் தெரியவந்தது.
சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத் துறையில் பொது நிர்வாக முதுகலை படிப்பு பயின்று வருகிறார். இதற்கான இறுதியாண்டு தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், தேர்வு தேதியும் காங்கிரஸ் கூட்ட தேதியும் ஒன்றாக அமைந்துவிட்டது.
அரசியலை விட கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க விரும்பிய சன்னி, இந்த தேர்வை எக்காரணம் கொண்டும் தவிர்க்க விரும்பவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களிடம் நிலைமையை விளக்கி, கூட்டத்தில் பங்கேற்காமல் தேர்வு எழுதச் செல்ல முறையான அனுமதி பெற்றதாக அவர் தெரிவித்தார்.
தேர்வு மையத்திற்கு வந்த சன்னியைக் கண்டு அங்கிருந்த பேராசிரியர்களும் மாணவர்களும் ஆச்சரியமடைந்தனர். அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, "அரசியல் மற்றும் மக்கள் சேவை எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு கல்வியும் வாழ்நாளின் இறுதிவரை தொடர வேண்டிய ஒன்று" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
ஏற்கனவே சட்டப் படிப்பை முடித்துள்ள சன்னி, வணிக நிர்வாகவியலில் (எம்.பி.ஏ) முதுகலைப் பட்டமும், அரசியல் அறிவியலில் முனைவர் (பிஹெச்.டி) பட்டமும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராகவும், தற்போதைய எம்பியாகவும் இருந்தபோதிலும், தேர்வு எழுதுவதற்காக சாதாரண மாணவரைப் போல தேர்வு அறைக்கு வந்த அவரது செயல் சமூக வலைத்தளங்களில் பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறது.