புதுடெல்லி,
மேற்கு வங்காளத்தில் கடந்த 2000ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை முதல் மந்திரியாக பதவி வகித்தவர் புத்ததேவ் பட்டாச்சார்யா (வயது 77). இவருக்கு கடந்த 18ந்தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து கொல்கத்தா நகரில் உள்ள உட்லேண்ட்ஸ் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த 25ந்தேதி அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. இதனால், அவர் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என தகவல் வெளிவந்துள்ளது. இதுபற்றி, தனியார் மருத்துவமனை வெளியிட்டு உள்ள செய்தியில், அவரது உடல்நிலை சீராக உள்ளது.
அவர் 93 சதவீத ஆக்சிஜன் அளவுடன் சுய நினைவுடன் இருக்கிறார். விழிப்புணர்வுடன், பேசவும் செய்கிறார். அவரது இருதய துடிப்பு விகிதம் நிமிடத்திற்கு 62 ஆக உள்ளது. அவரது ரத்த அழுத்தம் சீராக உள்ளது என்று தெரிவித்து உள்ளது.