பாட்னா,
பீகார் மாநிலம் அரரியா மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நேற்று போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது, பூர்ணியா மாவட்டத்தில் இருந்து வந்த வாகனத்தில் சோதனை செய்தபோது அதில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார், அதை கடத்தி வந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த முகமது ஷேக், முகமது உமீர், முகமது சபிருல், முகமது சகிபுல் ஆகிய 4 இளைஞர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதைப்பொருளை உள்ளூர் போதைப்பொருள் விற்பனையாளரான ஹைதரிடம் கொடுக்க கொண்டுவந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.