காந்தி நகர்,
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் அபத் கிராமத்தில் இருந்து அகமதாபாத் மாவட்டம் மெஹ்சனா பகுதியில் உள்ள கோவிலுக்கு நேற்று இரவு கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பயணித்தனர்.
இந்நிலையில், அகமதாபாத் நோக்கி செல்வதற்கு பதில் கார் மும்பை சாலையில் சென்றுள்ளது. சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு தவறான சாலையில் சென்றதை அறிந்த கார் டிரைவர் பின்னர் காரை வந்த பாதையிலேயே இயக்கியுள்ளார்.
சாலையில் கார் எதிர்திசையில் பயணித்துள்ளது. வதோதரா மாவட்டம் லெட்சுமிபுரா பகுதியில் வந்தபோது அதேசாலையில் வந்த மற்றொரு வாகனம் மீது கார் மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு வாகனத்தில் தப்பிச்சென்றவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.