திருவனந்தபுரம்,
கேரளம் மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை அவரது உறவினர் உள்பட சிலர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.
இதில் இளம்பெண்ணை தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகளுக்கு அழைத்துச் சென்று மது மற்றும் போதைப் பொருட்களை கொடுத்துள்ளனர். பின்னர் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரிய வந்தது.
மேலும் பாலியல் சம்பவத்தை செல்போன்களில் படம் பிடித்து வைத்து அந்த பெண்ணுக்கு மிரட்ட லும் விடுத்துள்ளனர். பலமுறை இந்த சம்பவம் நடைபெற்றுள்ள போதிலும் மிரட்டலுக்கு பயந்து இளம்பெண் இது பற்றி வெளியில் யாரிடமும் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.
ஆனால் நாளுக்கு நாள் நிலைமை மோசமானதை தொடர்ந்தே இளம்பெண் போலீசாரிடம் புகார் தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து பெரம்பரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக வெள்ளியூர் வலியபரம்பை ஜாசிப் (வயது 39), கருவண்ணூர் சம்போலி ஜாகீர் உசேன் (49), நடுவண்ணூர் கலம்குளத் ராஜீஷ் (40), நடுவண்ணூர் தானிப்பட்டை அபிலாஷ் (46) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட ராஜீஷ், முன்னதாக கப்பா சட்டத்தின் கீழ் நாடு கடத்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் மீது தந்தையை தாக்கி விலா எலும்புகளை உடைத்ததாக புகாரும் உள்ளது.