தேசிய செய்திகள்

இலவச திட்டங்கள் தொடர்ந்தால் பாதிப்பு ஏற்படும் - தலைமை பொருளாதார ஆலோசகர்

தண்ணீருக்கு சரியான விலை நிர்ணயித்தால் மட்டுமே அதை சேமிக்கவும், அனைவருக்கும் கொண்டு சேர்க்கவும் முடியும் என்று இந்திய தலைமை பொருளாதார ஆலோசகர் பேசினார்.

‘இலவச திட்டங்கள் நீண்ட காலம் தொடர்ந்தால் பாதிப்பு ஏற்படும்’ என்று இந்திய தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் பேசினார்.

உள்கட்டமைப்பு நீரின் முக்கியத்துவம்

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் சென்னை கிண்டியில், தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்த மாநாட்டு கருத்தரங்கம் நேற்று நடந்தது.

இதில் கூட்டமைப்பு தலைவர் சி.தேவராஜன் தலைமை தாங்கினார். உள் கட்டமைப்பு மற்றும் நீரின் முக்கியத்துவம் குறித்து இந்திய தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் பேசியதாவது:-

2047-ம் ஆண்டுக்குள் 'வளர்ந்த இந்தியாவை' உருவாக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உலகளாவிய போர், வர்த்தக நெருக்கடிகள் மற்றும் பருவநிலை மாற்றங்களுக்கு மத்தியிலும், இந்திய பொருளாதாரம் கடந்த நிதியாண்டில் 7.7 சதவீதம் என்ற அளவில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இது அதிர்ஷ்டத்தால் வந்தது அல்ல. நமது உள்கட்டமைப்பை வலுப்படுத்தியதால் கிடைத்தது.

பாதிப்பை ஏற்படுத்தும் இலவச திட்டங்கள்

உள்கட்டமைப்புக்காக (மூலதனச்செலவு) ரூ.12 லட்சம் கோடிக்கும் மேல் அரசு முதலீடு செய்துள்ளது. ஆனால், அரசாங்கத்தால் மட்டுமே அனைத் தையும் செய்ய முடியாது. தனியார் முதலீடுகளும் அதிக அளவில் தேவைப்படுகின்றன.நீண்டகால தனியார் முதலீடுகளை ஈர்க்க தரமான உள்கட்டமைப்பு, ஒப்பந்தங்களில் நம்பகத்தன்மை, நிலையான கொள்கைகள் மற்றும் சேவைக்கான சரியான கட்டணம் ஆகிய 4 விஷயங்கள் மிகவும் அவசியம். இலவச திட்டங்கள் நீண்ட கால அடிப்படையில் பாதிப்பை ஏற்படுத்தும்.

தண்ணீருக்கு சரியான விலை

தண்ணீரை நாம் இலவசமாக கருதி வீணாக்கக்கூடாது. அதை சாலைகள், மின்சாரம் போல ஒரு முக்கிய உள்கட்டமைப்பாக கருதி பாதுகாக்க வேண்டும். நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டுவதால்தான் வெள்ளம் மற்றும் வறட்சி ஏற்படுகிறது. தண்ணீருக்கு சரியான விலை நிர்ணயித்தால் மட்டுமே அதை சேமிக்கவும், அனைவருக்கும் கொண்டு சேர்க்கவும் முடியும். ஏழைகளுக்கு இது நேரடியாக நன்மையை அளிக்கும்.

திருவள்ளுவரின் “நீரின்று அமையாது உலகு..." என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி, நீரை அடிப்படையாகக் கொண்டு நமது உள்கட்டமைப்புகளை நேர்மையுடனும் தரத்துடனும் கட்டமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டமைப்பு துணைத் தலைவர் முருகவேல், கன்வினர் மோகன் ராமநாதன் மற்றும் ரவிச்சந்திரன், சதீஷ் உள்பட பலர் பேசினர்.