ஆலப்புழா,
கேரளாவின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பறவைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கோட்டயத்தின் வெச்சூர், கல்லறா, அயமனம் ஆகிய 3 பஞ்சாயத்துகளிலும், ஆலப்புழா மாவட்டத்தின் நெடுமுடி, கருவட்டா ஆகிய பஞ்சாயத்துகளிலும் இந்த வைரஸ் பரவல் கண்டறியப்பட்டு உள்ளது.
இது அந்தந்த மாவட்டங்கள் மட்டுமின்றி மாநில அளவிலும் சுகாதார அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்து உள்ளது. எனவே இந்த தொற்றை மேலும் பரவாமல் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
இதில் முக்கியமாக, பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் இருந்து 1 கி.மீ. சுற்றளவில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் அனைத்து பறவைகளையும் கொல்ல அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இதனால் கோழிகள், வாத்துகள் என சுமார் 80 ஆயிரம் பறவைகள் கொல்லப்பட்டு வருகின்றன.
கொல்லப்படும் வாத்துகளுக்கு இழப்பீடு வழங்க அரசு உத்தரவிட்டு இருக்கிறது. அதன்படி 2 மாதம் வரை வளர்ச்சி கொண்ட வாத்துகளுக்கு தலா ரூ.100-ம், அதற்கு மேற்பட்ட வளர்ச்சி கொண்ட வாத்துகளுக்கு தலா ரூ.200-ம் இழப்பீடாக வழங்கப்படுகிறது.