தட்சிண கன்னடா,
கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பன்ட்வாலா பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமிக்கு முகநூல் வழியே சரத் ஷெட்டி என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.
இந்த தொடர்பு நாளடைவில் நெருங்கிய நட்பானது. இந்த நிலையில், சிறுமியின் தொலைபேசி எண்ணை தனது உறவினரான மாருதி மஞ்சுநாத் என்பவருக்கு சரத் ஷெட்டி அளித்துள்ளார்.
இதன்பின்னர் மஞ்சுநாத் தொடர்ந்து வாட்ஸ்அப் குறுஞ்செய்தி வழியே சிறுமியுடன் பாலியல் சாட்டிங் செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 8ந்தேதி சிறுமியை மங்களூரு நகரில் உள்ள வணிக வளாகத்திற்கு வரும்படி சரத் கூறியுள்ளார்.
அதன்பின்பு சிறுமியிடம் பேசி, லாட்ஜ் ஒன்றுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின், தனது நண்பர்களில் ஒருவரான இதயத்துல்லா என்பவரை தொடர்பு கொண்டு லாட்ஜுக்கு வரும்படி கூறியுள்ளார்.
சிறுமியை இதயத்துல்லாவும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இருவருக்கும் லாட்ஜ் அறை ஏற்பாடு செய்து கொடுத்த சதீஷ் என்பவரும் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பின்னர் பேருந்தில் பன்ட்வால் பகுதிக்கு திரும்பியுள்ளார். போலீசில் புகாரும் செய்துள்ளார். தட்சிண கன்னடா போலீஸ் சூப்பிரெண்டு பகவான் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி சரத் ஷெட்டி, மாருதி மஞ்சுநாத், சதீஷ் மற்றும் இதயத்துல்லா ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர்.
அவர்கள் மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக உள்துறை மந்திரி அரகா ஞானேந்திரா கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.