தேசிய செய்திகள்

டிசம்பர் முதல் 2021 பிப்ரவரி வரை வடமாநிலங்களில் குளிர் அதிகமாக இருக்கும் - வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்

2020 டிசம்பர் முதல் 2021 பிப்ரவரி வரை வடமாநிலங்களில் குளிர் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

டிசம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலான நடப்பு பருவ குளிர்காலம் எப்படி இருக்கும் என்ற கணிப்பை இந்திய வானிலை ஆராய்ச்சி துறை நேற்று வெளியிட்டது.

அதன்படி, மேற்கண்ட 3 மாதங்களில், வட மாநிலங்களில் குளிர் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து வானிலை ஆராய்ச்சி துறை தலைமை இயக்குனர் மிருத்யுஞ்சய் மொகாபத்ரா கூறுகையில், வடக்கு மற்றும் மத்திய மாநிலங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை, இயல்பை விட குறைவாக இருக்கும். அடிக்கடி குளிர் காற்று வீசும். வடமாநிலங்களில் இரவுநேர வெப்பநிலை, இயல்பை விட குறைவாக இருக்கும். ஆனால், பகல்நேர வெப்பநிலை, இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று அவர் கூறினார்.