தேசிய செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

மண்டியா-

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தினமும் கர்நாடக அணைகளில் இருந்து பாசனம் மற்றும் தமிழகத்திற்காக காவிரி ஆற்றில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. இந்தநிலயில் நேற்று கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜசாகர்), கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 5,094 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதில் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடியில் காவிரியின் குறுக்கே 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணைக்கு நேற்று வினாடிக்கு 2,369 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் நீர் மட்டம் 100.32 அடியாக இருந்தது. இதில் விவசாய பாசனம் மற்றும் தமிழகத்திற்கு வினாடிக்கு 4,794 கன அடி நீர் காவிரியில் திறக்கப்பட்டது.

இதேபோல மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் கடல் மட்டத்தில் இருந்து 2,284 கொள்ளளவு கொண்ட கபினி அணைக்கு வினாடிக்கு 250 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 2,274.34 அடியாக இருந்தது.

இதில் தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 300 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது.

அதன்படி நேற்று இந்த 2 அணைகளில் இருந்து வினாடிக்கு 5,094 கன அடி நீர் தமிழகத்திற்கு காவிரியில் திறந்துவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.