தேசிய செய்திகள்

எரிபொருள் சிக்கனம்: அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க 2 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிக்கிம் முதல் மந்திரி

எரிபொருள் சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக முதல் மந்திரி பிரேம் சிங், அரசு நிகழ்ச்சி நடந்து சென்றுள்ளார்.

கேங்டாக்,

மேற்காசிய போர் சூழல் காரணமாக, 'கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு வெளிநாடுகளை நம்பியிருக்கும் நிலையை மாற்ற, எரிபொருள் பயன்பாட்டில் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும்' என, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார். அதற்கு முன் மாதிரியாக, தன் பாதுகாப்பு வாகன அணிவகுப்பில் இடம்பெறும் கார்களின் எண்ணிக்கையை அவர் பாதியாகவும் குறைத்தார்.

இதை தொடர்ந்து, சில மாநிலங்களில் முதல் மந்திரிகள், தங்களுக்கான வாகன அணிவகுப்பில் இடம்பெறும் வாகனங்களை குறைத்துக் கொண்டனர். அந்த வகையில் எரிபொருள் சிக்கன நடவடிக்கையை கடைப்பிடிக்கும்படி பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளை ஏற்கும் வகையில் சிக்கிம் முதல் மந்திரி பிரேம் சிங் தமாங், அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக 2 கி.மீ. தூரம் நடந்தே சென்று கவனம் ஈர்த்துள்ளார்.

தனது இல்லமான மின்டோக்கேங்கிலிருந்து, நிகழ்ச்சி நடைபெறும் பகுதியாப மனன் கேந்திரா வரை 2 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்றிருக்கிறார். எரிபொருள் சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில், அவர் நடந்து சென்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் வாடகைக் கார் ஒன்றில் தனது இல்லத்திற்கு பிரேம் சிங் திரும்பினார்.

சிக்கன நடவடிக்கை மற்றும் பொறுப்பான ஆட்சிமுறையை வெளிப்படுத்தும் விதமாக, முதல் மந்திரி நிகழ்ச்சிக்கு நடந்து சென்று முன்மாதிரியாக செயல்பட்டுள்ளார் என்றும், சிக்கன நடவடிக்கையை செயல்படுத்துவதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது என்றும் முதல் மந்திரியின் தனி செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

SCROLL FOR NEXT