தேசிய செய்திகள்

உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் பெட்ரோல் விலை மிகக்குறைவாகவே உயர்த்தப்பட்டுள்ளது - மத்திய அரசு

கடந்த இரண்டு வாரங்களில், பெட்ரோல் டீசல் விலை, லிட்டருக்கு ரூ.9.20 ஆக மொத்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி,

எரிபொருள் விலையை பொறுத்தவரையில், மற்ற நாடுகளில் உயர்த்தப்பட்ட விலையில், பத்தில் ஒரு பங்கு மட்டுமே இந்தியாவில் உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மார்ச் 14ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாதி, ஏப்ரல் 8ஆம் தேதி நிறைவடைகிறது. இன்று லோக்சபாவில், எரிபொருள் விலை உயர்வு குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு மக்களவையில் பதிலளித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி கூறுகையில்;-

ஏப்ரல் 2021 மற்றும் மார்ச் 22 க்கு இடையேயான காலகட்டத்தில், அமெரிக்கா எரிபொருள்(பெட்ரோல்) விலையை 51% அதிகரித்துள்ளது.

அந்த ஒரு வருட காலகட்டத்தில், கனடா 52%, ஜெர்மனி 55%, இங்கிலாந்து 55%, பிரான்ஸ் 50%, ஸ்பெயின் 58% பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளன. ஆனால் இந்தியாவில் 5% மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் விளக்கமளித்தார்.

கடந்த இரண்டு வாரங்களில், பெட்ரோல் டீசல் விலை, லிட்டருக்கு ரூ.9.20 ஆக மொத்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கரை மாத காலத்துக்கு பின், எரிபொருள் விலை 13வது முறையாக இன்று உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT