தேசிய செய்திகள்

எரிபொருள் விலை கடுமையாக உயர்வு: ஏர் இந்தியா எடுத்த முடிவு

ஏர் இந்தியா நிறுவனம் தனது விமான சேவையில் சுமார் 10 சதவீதத்தை குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போர், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் இழுபறியாகவே தொடர்ந்து வருகிறது. உலகின் 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் இருப்பதால் உலகளவில் எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், விமான எரிபொருள் விலை அதிகமாகி இருப்பதால் விமான நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது. இதனிடையே சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் விலையை 5 சதவீதம் உயர்த்தியது மத்திய அரசு.

இந்தநிலையில், சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், ஏர் இந்தியா நிறுவனம் தனது விமான சேவையில் சுமார் 10 சதவீதத்தை குறைக்க முடிவு செய்துள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் 100 விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற சர்வதேச இடங்களுக்கான விமான சேவைகள் அதிக அளவில் குறைப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.