திருவனந்தபுரம்,
கேரளாவில் நேற்று மட்டும் புதிதாக 28 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதியானது. இவர்களில் 25 பேர் துபாயில் இருந்து திரும்பியவர்கள். இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது. 31-ந் தேதி வரை அங்கு மாநில எல்லையை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலத்தில் 64 ஆயிரம் பேர் கண்காணிப்பில் உள்ளதாகவும், 383 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறினார். கேரள ஐகோர்ட்டு ஏப்ரல் 8-ந் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே சாலக்குடி கூடப்புழா பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் தடை உத்தரவையும் மீறி பிரார்த்தனை நடைபெற்றது. இதில் சுமார் 100 பேர் கலந்துகொண்டனர். இதுதொடர்பாக பாதிரியார் பாலி படயாட்டி என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது விதிகளை மீறுதல், பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பிரார்த்தனையில் கலந்துகொண்ட 100 பேர் மீதும் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் பாதிரியாரை ஜாமீனில் விடுதலை செய்தனர்.