தேசிய செய்திகள்

ஜி20 மந்திரிகள் மாநாடு: மத்திய மந்திரி ஜெயசங்கர் இத்தாலி பயணம்

கிரீஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு மத்திய வெளிவிவகார மந்திரி ஜெயசங்கர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

புதுடெல்லி,

ஜி20 மந்திரிகள் மாநாட்டில் கலந்து கொள்ள மத்திய வெளிவிவகார மந்திரி ஜெயசங்கர் இத்தாலி நாட்டின் ரோம் நகருக்கு செல்கிறார். இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பு அதிகாரி அரிந்தம் பக்சி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.

அவர் கூறும்பொழுது, கிரீஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு மத்திய வெளிவிவகார மந்திரி ஜெயசங்கர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக அவர் நாளை கிரீஸ் நாட்டுக்கு புறப்பட்டு செல்கிறார். கடந்த 2003ம் ஆண்டுக்கு பின்பு முதன்முறையாக அந்நாட்டுக்கு மேற்கொள்ளும் மத்திய வெளிவிவகார மந்திரி அளவிலான பயணம் இதுவாகும்.

வரும் 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் மேற்கொள்ளும் இந்த பயணத்தில் கிரீஸ் நாட்டின் வெளிவிவகார மந்திரியுடன், ஜெயசங்கர் ஆலோசனை நடத்துகிறார். அதன்பின்னர் அவர் இத்தாலி நாட்டுக்கு புறப்பட்டு செல்கிறார்.

இதில், ரோம் நகரில் நடைபெறும் ஜி20 மந்திரிகள் மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். ஜி20 மந்திரிகள் உச்சி மாநாடு 2021ல் வெளிவிவகார மந்திரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டமும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை கலந்து கொள்ள உள்ளன.

SCROLL FOR NEXT