ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் கரிமாநகர் பகுதியை சேர்ந்தவர் லெட்சுமி (வயது 55). கூலித்தொழிலாளியான இவரை கடந்த 1ம் தேதி கொலபல்லி கிராமத்தை சேர்ந்த தினேஷ் என்ற இளைஞர் விவசாய வேலைக்கு வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து, லெட்சுமி இளைஞர் தினேசின் பைக்கில் புறப்பட்டு சென்றுள்ளார்.
லெட்சுமியின் கிராமத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நஸ்டுலாபூர் என்ற பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு ஆள் நடமாட்டமற்ற பகுதியில் லெட்சுமி அணிந்திருந்த 5 கிராம் தங்க நகை, 20 கிராம் வெள்ளி நகைகளை தினேஷ் மிரட்டி பறித்துள்ளார். பின்னர், லெட்சுமியை அப்பகுதியில் உள்ள கிணற்றில் தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து பைக்கில் தப்பிச்சென்றுள்ளார்.
கிணற்றுக்குள் விழுந்த லெட்சுமிக்கு நீச்சல் தெரியும் என்பதால் அவர் நீந்தி உயிர் பிழைத்துள்ளார். அவர் 1ம் தேதி காலை 10 மணி முதல் 2ம் தேதி காலை 7 மணிவரை கிணற்றுக்குள் சிக்கியுள்ளார். 2ம் தேதி காலை அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் கிணற்றுக்குள் பெண் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், கிணற்றுக்குள் 21 மணி நேரமாக உயிருக்கு போராடிய லெட்சுமியை மீட்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், லெட்சுமியின் நகைகளை பறித்துக்கொண்டு அவரை கிணற்றுக்குள் தள்ளிவிட்ட தினேசை கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் தினேஷ் சூதாட்டத்தில் லட்ச கணக்கில் பணத்தை இழந்ததும், அதனை தொடர்ந்து வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.