புதுடெல்லி,
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், தமிழக அரசு விநாயகர் சிலை ஊர்வலத்துக்கும், பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபடவும் தடை விதித்து கடந்த 13-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து தூத்துக்குடியை சேர்ந்த ராமசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை, தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க கடந்த 20-ந் தேதி மறுப்பு தெரிவித்தது.
இதற்கு எதிராக ராமசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான காணொலி அமர்வு விநாயகர் சதுர்த்தி விழா நிறைவடைந்து விட்டதால் ஐகோர்ட்டு உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக மனுதாரர் தெரிவித்ததை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.