புதுச்சேரி,
புதுச்சேரி அரசால் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமையல் எரிவாயு சிலிண்டர் மானிய தொகை மேலும் 50 ரூபாய் உயர்த்தப்படும் என்று முதல்-மந்திரி ரங்கசாமி சட்டசபையில் அறிவித்துள்ளார்.
புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று 5-வது நாளாக நடைபெற்றது. முதல்-மந்திரி ரங்கசாமி, நடப்பு நிதியாண்டுக்கான முழுமையான சட்டமன்றத்தில் உரையாற்றினார்:-
புதுவையின் அனைத்து துறைகளுக்கும் தேவையான நிதி ஒதுக்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியில் 93 முதல் 96 சதவீத நிதி செலவிடப்படுகிறது. ஆதிதிராவிட மாணவர்களுக்கு வழங்குவது போல் மீனவ சமுதாய மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை முழுமையாக வழங்கப்படும். கியாஸ் சிலிண்டர் மானியம் ரூ.50 உயர்த்தப்படும். இதன்படி சிகப்பு ரேஷன்கார்டுக்கு ரூ.50 மானியம் உயர்த்தப்பட்டு ரூ.350 ஆகவும், மஞ்சள் கார்டுக்கு ரூ.50 உயர்த்தப் பட்டு ரூ.200 ஆகவும் வழங்கப்படும். இவ்வாறு முதல்-மந்திரி ரங்கசாமி பேசினார்.
இந்த மானிய உயர்வு அறிவிப்பு வெளியானதும், சட்டசபையில் இருந்த ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி பலத்த வரவேற்பு தெரிவித்தனர்.
விலைவாசி உயர்வால் தவித்து வரும் நிலையில், புதுச்சேரி அரசின் இந்த சிலிண்டர் மானிய உயர்வு தங்களுக்கு பெரும் நிம்மதியை தந்துள்ளதாக அம்மாநில இல்லத்தரசிகளும், பொதுமக்களும் முதல்-மந்திரி ரங்கசாமிக்கு தங்களின் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.