தேசிய செய்திகள்

சிக்கிம்: சுரங்க பணியில் வாயு கசிவு; 7 தொழிலாளர்கள் பலி

தொழிலாளர்கள் 27 பேர் உள்ளே சிக்கி கொண்டனர்.

நாம்சி

சிக்கிமில் சுரங்க பணியில் வாயு கசிவு ஏற்பட்டதில் சிக்கி 7 தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர்.

சிக்கிம் மாநிலத்தின் நாம்சி மாவட்டத்தில் ஜொலுங்கே நகரில் சமர்டங் பகுதியில் சுரங்கம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அப்போது, திடீரென நேற்று மதியம் வாயு கசிந்துள்ளது என கூறப்படுகிறது. இதில், தொழிலாளர்கள் 27 பேர் உள்ளே சிக்கி கொண்டனர்.

7 தொழிலாளர்கள் பலி

சம்பவம் பற்றி அறிந்து மாவட்ட கலெக்டர் அனுபா தம்லிங் உடனடியாக அந்த பகுதிக்கு சென்றார். இதனை தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு, தொழிலாளர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது என கூறினார். அதன் பின்னரே எத்தனை பேர் சுரங்கத்தில் சிக்கியுள்ளனர் என தெரிய வரும் என்றார்.

மீட்பு பணி

இந்த நிலையில், சுரங்கத்தில் வாயு கசிவில் சிக்கி 7 தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். அவர்களின் உடல்கள் கேங்டாக் நகரில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. மீதமுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த பணியில், தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், சிக்கிம் போலீசார், தீயணைப்பு மற்றும் அவசரகால பணியாளர்கள், சுகாதார துறையினர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.