கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

பொதுச்செயலாளர் பதவி: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம்கோர்ட்டு

வழக்கறிஞர் சூரியமூர்த்தி தொடர்ந்த மனுவை சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுடெல்லி,

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூரிய மூர்த்தி, சென்னை சிவில் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், கடந்த 2022 ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களையும், பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று அறிவிக்க கோரியும் முறையிட்டு இருந்தார்.

இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை சிவில் கோர்ட்டு கடந்த ஜூலையில் விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, சூரியமூர்த்தி சிவில் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கையும் நிராகரித்து கடந்த செப்டம்பர் 4-ந்தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சூரிய மூர்த்தி சார்பில் வக்கீல் அனில் குமார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஆலோக் ஆராதே அமர்வு இன்று விசாரித்தது.

இந்நிலையில் இரட்டை இலை சின்னம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக வழக்கறிஞர் சூரியமூர்த்தி தொடர்ந்த மேல்முறையீட்டை வழக்கை சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

SCROLL FOR NEXT