தேசிய செய்திகள்

அமித்ஷாவுக்கு பூங்கொத்து கொடுத்து, வணக்கம் வைத்து அசத்திய பயிற்சி நாய்...

அமித்ஷாவுக்கு பூங்கொத்து கொடுத்து, தலை குனிந்து வணக்கம் வைத்து பயிற்சி நாய் ஒன்று அசத்தியுள்ளது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ராஜஸ்தானின் ஜெய்சால்மர் நகரில் ரோகிடாஷ் பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று நேரில் சென்று அவர்களை சந்தித்து பேசினார்.

இதன்பின்பு அவர் வீரர்களுடன் ஒன்றாக அமர்ந்து இரவு உணவு சாப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத்தும் கலந்து கொண்டார். இதன்பின்னர் இன்று 2வது நாளாக அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இதன் ஒரு பகுதியாக ஜெய்சால்மர் நகரில், எல்லை பாதுகாப்பு படையின் (பி.எஸ்.எப்.) 57வது எழுச்சி நாளை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் அவர் இன்று கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பயிற்சி பெற்ற நாய் ஒன்று வாயில் பூங்கொத்துகள் அடங்கிய கூடை ஒன்றை வாயில் சுமந்தபடி ஓடி சென்று, அதனை அமித்ஷாவிடம் வழங்கியது.

அவர் பூக்கூடையை வாங்கிய பின்பு, அவர் முன் பணிவாக தலை குனிந்து அமர்ந்து வணக்கம் செலுத்தியது. இதன்பின்பு அங்கிருந்து திரும்பி சென்றது. இது மேடையில் இருந்த அமித்ஷா உள்ளிட்ட அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.