புதுடெல்லி
'குளோபல் சவுத்' (வளரும் மற்றும் ஏழை நாடுகள் அடங்கிய பகுதி) நாடுகள் 'விதிகளை வடிவமைக்கும் சக்தியாக' (rule shaper) மாற வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.
உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியப் போர்களின் உலகளாவிய தாக்கங்களிலிருந்து, வளரும் பொருளாதாரங்களை பாதுகாப்பது குறித்து விவாதிக்கப்படவுள்ள இரண்டு நாள் வருடாந்திர பிரிக்ஸ் உச்சிமாநாட்டைத் தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:-
பிரிக்ஸ் அமைப்பு உலக அரங்கில் தனித்துவமான அடையாளத்தை நிறுவியுள்ளது. இந்த அமைப்பு யாருக்கும் எதிரானது அல்ல. இன்று, உலகளாவிய நெருக்கடிகளை எதிர்கொள்வதில் 'குளோபல் சவுத்' நாடுகள் முன்னணியில் உள்ளன. ஆனால் முடிவெடுக்கும் செயல்பாட்டில் பின்வரிசையில் உள்ளன.
இந்த 'சலுகை பிரமிடை' (pyramid of privilege) நாம் 'கூட்டாண்மைக்கான தளமாக' (platform of partnership) மாற்ற வேண்டும். அதாவது ஒவ்வொரு நாட்டிற்கும் குரல் இருக்கும், ஒவ்வொரு உறுப்பினருக்கும் பங்கு இருக்கும், மற்றும் மனிதகுலத்தின் வளர்ச்சியே ஒவ்வொரு முயற்சியின் மையமாகவும் இருக்கும் ஒரு தளமாக இது அமைய வேண்டும்.
இது தொடர்பாக, உலகளாவிய நிர்வாகச் சீர்திருத்தத்திற்கான 10 முன்மொழிவுகளை நாம் கூட்டாக உருவாக்க வேண்டும். அடுத்த உச்சிமாநாட்டிற்குள் அவற்றை ஒரு 'பிரிக்ஸ் சீர்திருத்த வரைபடமாக' (roadmap) வடிவமைக்க வேண்டும் என்றும் நான் முன்மொழிகிறேன்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் (UNSC) உடனடி சீர்திருத்தம் தேவை. பாதுகாப்பு சபையின் சீர்திருத்தங்களை இனியும் தாமதப்படுத்த முடியாது.
தற்போதைய உலகளாவிய நிர்வாக கட்டமைப்பு ஒரு பிரமிடை போன்றது. அதிகாரம் மற்றும் முடிவெடுக்கும் திறன் ஆகியவை உச்சியில் குவிந்துள்ளன. அதே சமயம் கீழ் மட்டங்களில் உள்ள நாடுகள் இந்த முடிவுகளால் பாதிக்கப்படுகின்றன, ஆனால் அவற்றை வடிவமைக்கவோ மாற்றவோ இயலாத நிலையில் உள்ளன.
உலகம் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களைச் சமாளிக்க 'குளோபல் சவுத்' நாடுகள் 'விதிகளை வடிவமைக்கும் சக்தியாக' மாற வேண்டும். பிரிக்ஸ் உறுப்பு நாடுகளை சேர்ந்த கடல்சார் பணியாளர்களின் (seafarers) பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவர்களுக்கிடையே ஒரு ஒருங்கிணைப்பை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம் மற்றும் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ ஆகியோர் முன்னிலையில் பிரத்மர் மோடி இந்த கருத்துகளைத் தெரிவித்தார்.
இம்மாநாட்டில் பங்கேற்கும் பிற தலைவர்களில் அபுதாபி இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யான், எத்தியோப்பியப் பிரதமர் அபி அகமது அலி, எகிப்திய அதிபர் அப்தெல் பத்தாக் எல்-சிசி மற்றும் வியட்நாமியப் பிரதமர் லே மின் ஹங் ஆகியோர் அடங்குவர்.