தேசிய செய்திகள்

கோவாவில் டவ்தே புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்- முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் அறிவிப்பு

கோவாவில் டவ்தே புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார்.

கோவா,

மத்திய கிழக்கு அரபிக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது டவ்தே புயலாக வலுவடைந்தது.

இந்தப் புயல், அதிதீவிர புயலாகி மாறி, வடக்கு நோக்கி நகர்ந்தது. புயல் காரணமாக கேரளா, கர்நாடகா, கோவா, மராட்டியம், குஜராத் மாநிலங்களில் கனமழை பெய்தது. கடலோர மாவட்டங்களில் பலத்த இடி, மின்னலுடன், கனமழை பொழிந்தது. பலத்த சூறைக்காற்றும் வீசியது.

குஜராத்தில் டவ்தே புயல் நேற்று முன்தினம் கரையை கடந்தாலும், அது ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள், தேசங்கள் கடுமையாக உள்ளன. இந்த புயலுக்கு குஜராத், கர்நாடகா, மராட்டியத்தில் 21 பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், கோவாவில் டவ்தே புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

கோவாவில் டவ்தே புயல் காரணமாக உயிர் இழப்பு ஏற்பட்டதற்கு மிகவும் வருத்தப்படுகிறோம். மாநிலத்தில் புயல் காரணமாக உயிரிழந்த ஒவ்வொரு குடும்பங்களுக்கு அரசு சார்பில் தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். இந்த நேரத்தில் என் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் துயரமடைந்த குடும்பங்களுடன் உள்ளன. என குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT