தேசிய செய்திகள்

கோவா: இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ள இரண்டு தமிழ் படங்கள்

கோவாவில் நடைபெற உள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இரண்டு தமிழ் படங்கள் திரையிடப்பட உள்ளன.

புதுடெல்லி,

இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI), இந்திய அரசின் திரைப்படத்துறையால் கடந்த 1952 ஆம் ஆண்டு முதன் முறையாக மும்பையில் நடைபெற்றது. அதன் பின்னர் மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களில் நடந்துள்ளது. 2013 ஆம் ஆண்டு 44 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்றது.

அதன் பின்னர் தற்போது 50-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் வரும் நவம்பர் மாதம் 20ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை மந்திரிபிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இந்த விழாவில் 76 நாடுகளைச் சேர்ந்த 200 திரைப்படங்கள், 26 இந்திய மொழி படங்கள் மற்றும் 16 குறும்படங்கள் ஆகியவை திரையிடப்பட உள்ளன. தமிழ் மொழியில் இருந்து பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு மற்றும் லட்சுமி ராமகிருஷ்னன் இயக்கிய ஹவுஸ் ஓனர் ஆகிய திரைப்படங்கள் திரையிடுவதற்கு தேர்வாகி உள்ளன.

இந்தியில் இருந்து உரி:சர்ஜிகல் ஸ்ட்ரைக், பதாய் ஹோ, கல்லி பாய் மற்றும் சூப்பர் 30 ஆகிய திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்திய திரைத்துறையில் வெளியாகி 50 வருடங்களை கடந்த புகழ்பெற்ற 12 திரைப்பங்கள் திரையிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்வையற்றவர்களுக்காக, திரையில் வசனங்களுக்கு இடையில் வரும் காட்சிகளை விளக்கி கூறும் விதமாக ஒரு சிறப்பு திரைப்படம் திரையிடப்படும் என்று பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.