தேசிய செய்திகள்

செப்டம்பர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ.1.73 லட்சம் கோடி

2024-ம் ஆண்டில் ஒட்டு மொத்த ஜி.எஸ்.டி. வசூல் 9.5 சதவீதம் அதிகரித்து, ரூ.10.9 லட்சம் கோடியாக உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நடப்பு ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) வழியே ரூ.1.73 லட்சம் கோடி வசூலாகி உள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இது 6.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் (செப்டம்பரில்) மொத்த வசூல் ரூ.1.62 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, நடப்பு ஆண்டின் செப்டம்பரில் சி.ஜி.எஸ்.டி., எஸ்.ஜி.எஸ்.டி., ஐ.ஜி.எஸ்.டி. மற்றும் செஸ் வரி ஆகிய அனைத்தும் அதிகரித்து இருக்கிறது என தகவல் தெரிவிக்கின்றது.

2024-ம் ஆண்டில் ஒட்டு மொத்த ஜி.எஸ்.டி. வசூல் 9.5 சதவீதம் அதிகரித்து, ரூ.10.9 லட்சம் கோடியாக உள்ளது. இது, 2023-ம் ஆண்டில் ரூ.9.9 லட்சம் கோடியாக இருந்தது.

நடப்பு ஆண்டில் ஏப்ரலில் அதிக அளவாக ரூ.2.10 லட்சம் கோடி வசூலாகி இருந்தது. இதேபோன்று, 2023-24 நிதியாண்டில் மொத்த ஜி.எஸ்.டி. வசூல் ரூ.20.18 லட்சம் கோடியாக உள்ளது. இது முந்தின ஆண்டுடன் ஒப்பிடும்போது 11.7 சதவீதம் அதிகம் ஆகும்.

நடப்பு ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டுக்கான சராசரி மாத வசூல், ரூ.1.68 லட்சம் கோடியாக உள்ளது. இது முந்தின ஆண்டில் ரூ.1.5 லட்சம் கோடியாக இருந்தது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்