புதுடெல்லி,
டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தலைநகரில் 500 புதிய மின்சார பஸ் சேவை துவக்கி வைக்கப்பட்டது. இதில், பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின், முதல்-மந்திரி ரேகா குப்தா ஆகியோர் கொடியசைத்து மின்சார பஸ் சேவையை துவக்கி வைத்தனர்.
இதனால், டெல்லியில் மொத்த மின்சார பஸ்களின் எண்ணிக்கை 4 ஆயிரம் ஆக உயர்ந்து உள்ளது. டெல்லியில், 27 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியை பிடித்த பா.ஜ.க., கடந்த ஆண்டு இதே நாளில் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதனை முன்னிட்டு முதலாம் ஆண்டு தின கொண்டாட்டத்தினை குறிக்கும் வகையில் இந்த சிறப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.
இதில், டெல்லி பா.ஜ.க. தலைவர் வீரேந்திர சச்தேவா, டெல்லி அரசில் மந்திரிகளாக உள்ள பிரவேஷ் சாகிப் சிங் ஆஷிஷ் சூட், டாக்டர் பங்கஜ் குமார் சிங், ரவீந்தர் இந்திரஜ், கபில் மிஷ்ரா, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிற முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர்.