தேசிய செய்திகள்

புதுச்சேரியில் அரசு ஐஸ் கிரீம் தொழிற்சாலை; முதல்-மந்திரி ரங்கசாமி அறிவிப்பு

ரூ.112 கோடி மதிப்பில் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் கையாளும் தானியங்கி பால் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்படுகிறது.

புதுச்சேரி,

அரசு நிறுவனமான பாண்லே மூலம் ரூ.34 கோடி செலவில் ஐஸ் கிரீம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும் என புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி அறிவித்துள்ளார்.

நாட்டின் 80-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், புதுச்சேரி காந்தி திடலில் நடைபெற்ற மாநில அரசு விழாவில் புதுச்சேரி முதல்-மந்திரி என். ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றிச் சிறப்பித்தார்.

கொடியேற்று விழாவிற்கு வருகை தந்த முதல்-மந்திரி ரங்கசாமி அவர்களுக்குக் காவல்துறையினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், முப்படை மற்றும் காவல்துறையினரின் கம்பீரமான அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

சுதந்திர தின விழாவில் பொதுமக்களிடையே உரையாற்றிய ரங்கசாமி, புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் விவசாயிகளின் நலனைக் கருti பல புதிய திட்டங்களை அறிவித்தார்.

அதன்படி, புதுச்சேரியில் பால் உற்பத்தியை மேம்படுத்தும் வகையிலும், பொதுமக்களுக்குத் தரமான பால் வழங்கும் நோக்கத்திலும், தோராயமாக ரூ. 112 கோடி மதிப்பில் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் பால் கையாளும் அதிநவீன தானியங்கி பால் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்படும்.

அதைப்போல, அரசு கூட்டுறவு நிறுவனமான 'பாண்லே' (PONLAIT) மூலம், ரூ. 34 கோடி செலவில் பிரத்யேகமான ஐஸ்கிரீம் தயாரிக்கும் புதிய தொழிற்சாலையும் நிறுவப்படும் என அவர் அறிவித்தார். புதுச்சேரியின் பொருளாதார வளர்ச்சியை நோக்கியும், உள்ளூர் உற்பத்தியைப் பெருக்குவதையும் இலக்காகக் கொண்டு முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புகள் அப்பகுதி மக்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.