புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது, தி.மு.க.வை சேர்ந்த திருச்சி சிவா எம்.பி. பேசியதாவது:-
மத்திய அரசின் கீழ் இயங்கிவரும் அரசு அலுவலர் தேர்வு ஆணையம் அரசின் அமைச்சரவையிலும் துறைகளிலும் பல்வேறு துறைகளுக்கான அலுவலர்களை தேர்ந்தெடுப்பதற்கான பொறுப்பான அமைப்பாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அரசு அலுவலர் ஆணையம் அரசிதழ் பதிவு பெறாத அலுவலர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக தேர்வுகளையும், நேர்முகத் தேர்வுகளையும் நடத்தி வருகிறது.
அரசு அலுவலர் தேர்வு ஆணையம் அலகாபாத், டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை மற்றும் கவுகாத்தி ஆகிய 7 மண்டல அலுவலகங்களையும், 2 துணை மண்டல அலுவலகங்களையும் பெற்றுள்ளது. முன்னர் அலுவலர் தேர்வு ஆணையம் இந்த தேர்வுகளை பெரு மண்டல அளவில் நடத்தி வந்தது. ஆனால் இப்போது இந்த தேர்வுகள் தேசிய அளவில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றது.
எனவே, நாட்டின் இதர பகுதிகளை சேர்ந்த இந்தி அறியாதவர்கள் அரசுப் பணிகளில் சேருவதற்கான வாய்ப்பை பெற முடியாத நிலைமை உள்ளது. அதன் மூலம் பெரும்பாலோர் வேலைவாய்ப்பு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் திறமைசாலிகளாகவும், மிகவும் ஆற்றல் பெற்றவர்களாகவும் இருந்தபோதிலும் இந்தி தெரியாத காரணத்தால் வேலை வாய்ப்பை இழந்து வருகின்றனர்.
மத்திய அரசின் தேர்வாணைய குழு (யு.பி.எஸ்.சி.) தேர்வுகள் அனைத்து மாநில மொழிகளிலும் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு இருக்கும் போது, அரசு அலுவலர் தேர்வு ஆணையத்தால் ஏன் எல்லா மாநில மொழிகளிலும் அந்தத் தேர்வுகளை நடத்த முடியாது? அதே போன்று நேர்முகத்தேர்வுகளையும் அனைத்து மாநில மொழிகளிலும் நடத்த முடியாதா?
முன்னர் அரசு பணியாற்றும் விருப்பம் உள்ளவர்கள் தங்கள் சொந்த மாநிலத்திலேயே வேலை வாய்ப்பு பெற்று வந்தனர். இது மிகவும் முக்கியமான தீவிரமான பிரச்சினை. எனவே அலுவலர் தேர்வு ஆணையத்தை அழைத்து தேர்வுகளையும், அனைத்து மாநில மொழிகளிலும் நடத்த அரசு உத்தரவிடவேண்டும். ஏற்கனவே இருந்தது போல பெரு மண்டல அளவுகளில் இந்த தேர்வுகளை நடத்தவேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.
உடனே தமிழக உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. எழுந்து இது முக்கியமான பிரச்சினை. திருச்சி சிவாவின் கருத்தை நான் ஆதரிக்கிறேன் என்று கூறினார். அவரைத்தொடர்ந்து பலர், திருச்சி சிவாவின் கருத்துக்கு தங்கள் ஆதரவை அவையில் பதிவு செய்தனர்.
அதைத்தொடர்ந்து பேசிய மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு, இது முக்கிய பிரச்சினையாக இந்தக் கருத்தில் தங்கள் ஆதரவைப் பதிவு செய்ய ஒவ்வொரு உறுப்பினரும் விரும்புகின்றனர். எனவே அலுவலர் நலத்துறை மந்திரி இதுகுறித்து கவனம் செலுத்தி முடிந்ததை செய்யவேண்டும் என்று தெரிவித்தார்.