திருவனந்தபுரம்,
கேரள பல்கலைக்கழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு மாணவர்களுக்கு நடந்த செமஸ்டர் தேர்வில், வினாத்தாள்களுக்கு பதிலாக விடைக்குறிப்பு தாள்கள் வழங்கப்பட்டன. இதன் காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டு, மே மாதம் 3 ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதே போல கண்ணூர் பல்கலைக்கழகத்தில் நடந்த தேர்வில், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கு கேரள கவர்னர் ஆரிஃப் கான் உத்தரவிட்டுள்ளார்.