தேசிய செய்திகள்

அரசு பணி நியமன தேர்வில் முறைகேடு: ஜார்க்கண்ட் மாணவர்கள் போராட்டம் 12-வது நாளாக நீடிப்பு

சி.ஜே.பி. உறுப்பினர்கள் ராஞ்சிக்கு நேரில் சென்று போராட்டத்தில் துணை நிற்பார்கள் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்தார்.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

மாணவர்கள் போராட்டம்

அங்கு அரசுப் பணித் தேர்வாணையம் மற்றும் பிற பணி நியமனத்திற்கு நடத்தப் பட்ட தேர்வுகளில் முறைகேடு நடை பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டி நூற்றுக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் முண்டா அரங்கத்தில் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த முறைகேடுகள் குறித்து பிற மாநிலங்களை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதிகளை கொண்ட ஒரு தனிக்குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஜார்க்கண்ட் மாணவர்கள் போராட்டத்துக்கு சி.ஜே.பி ஆதரவு அளிக்கும் என்றும், சி.ஜே.பி.

உறுப்பினர்கள் ராஞ்சிக்கு நேரில் சென்று போராட்டத்தில் துணை நிற்பார்கள் என்றும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே நேற்று அறிவித்தார்.

12-வது நாளாக நீடிப்பு

இந்தநிலையில், மாணவர்களின் போராட்டம் 12-வது நாளாக நீடித்து வருகிறது. மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் மந்திரிகள், அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.

அதே நேரத்தில் மாணவர்கள் அமைப்பு மூடிய அறைக்குள் பேச்சுவார்த்தை நடத்தும் முன்மொழிவை நிராகரித்துள்ளது. கேமரா முன்னிலையில் வெளிப்படையாக மட்டுமே பேச்சு வார்த்தைக்கு ஒப்புக் கொள்வோம் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

பணி நியமன முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வு குழு இதுவரை 20 பேரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராஞ்சியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் 12-வது நாளாக நீடித்து வருவதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.