தேசிய செய்திகள்

இனி வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் தண்டனைக்குரிய குற்றம்: மத்திய அரசு கொண்டு வரும் புதிய மசோதா

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 20-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 13-ந் தேதி வரை நடைபெறுகிறது.

புதுடெல்லி,

'வந்தே மாதரம்' பாடலை அவமதிப்பதை இனி தண்டனைக்குரிய குற்றமாக்க, வரும் மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு புதிய மசோதாவினை கொண்டு வருகிறது.

வந்தே மாதரம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 20-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 13-ந் தேதி வரை நடைபெறுகிறது. முன்னதாக நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு விழாக்களில் தேசிய பாடலான 'வந்தே மாதரம்' முழுமையாக பாடப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. அதற்கான வழிகாட்டுதலையும் வெளியிட்டது.

தண்டனைக்குரிய குற்றம்

அதன்படி, அரசு விழாக்களில் மாநில பாடல்களை முதலில் பாடலாம். அதன்பின் தேசியப் பாடலும் (வந்தே மாதரம்), அதையடுத்து தேசிய கீதமும் (ஜன கன மன) கட்டாயம் பாடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், வந்தே மாதரம் பாடலுக்கு தடங்கல் ஏற்படுத்துவது அல்லது அவமதிப்பு செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் வகையில், 'தேசிய கவுரவத்துக்கு அவமதிப்பு ஏற்படுத்துவதை தடுக்கும் சட்டத் திருத்த மசோதா 2026-ஐ, வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் அறிமுகம் செய்து, நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

புதிய மசோதா

இதுதொடர்பாக மக்களவை செயலகம் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்ட நாடாளுமன்ற அலுவல் குறிப்பில், இந்த மசோதா அறிமுகமும் பட்டியலிடப்பட்டுள்ளது. தேசிய கவுரவத்துக்கு அவமதிப்பு ஏற்படுத்துவதைத் தடுக்கும் சட்டம் 1971-ல் திருத்தம் மேற்கொள்ளும் வகையில் இந்த மசோதா கொண்டுவரப்படுகிறது.

பிறப்பு-இறப்பு பதிவு திருத்த சட்ட மசோதா

மேலும், பிறப்பு மற்றும் இறப்புகளை தாமதமாகப் பதிவு செய்வதற்கான விதிகளை மேலும் கடுமையாக்கும் வகையில், பிறப்பு - இறப்பு பதிவு சட்டம் 1969-இன் பிரிவு 13(3)-இல் கடந்த 2023-இல் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்தில் மீண்டும் திருத்தம் மேற்கொள்ளும் வகையில் 'பிறப்பு-இறப்பு பதிவு திருத்த சட்ட மசோதா 2026' மழைக்கால கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.