கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

கிரானைட் குவாரி அனுமதி மேல்முறையீட்டு மனு: டிராபிக் ராமசாமி பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கிரானைட் குவாரி அனுமதி மேல்முறையீட்டு மனுவின் மீது டிராபிக் ராமசாமி பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

தமிழகத்தில் மணல் கொள்ளை, இயற்கை வளம், கனிம வளங்கள் சட்ட விரோதமாக கடத்தப்படுவதை தடுக்கவும், மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தக்கோரியும், மணல் கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கை கோரியும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவிட்டதோடு, சட்ட விரோத குவாரிகளையும், மணல் கடத்தலை தடுக்கும் வகையில் கிரானைட் குவாரிகளுக்கு ஐகோர்ட்டு அனுமதி இல்லாமல் உரிமம் கொடுக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது எதிர்மனுதாரர் டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை வருகிற 29-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.