காசர்கோடு,
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கிதூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயா நந்தன். இவரது மகள் பிரபல்லா (23 வயது). இவருக்கும், நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த மணி என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருந்தது.
இதற்கிடையே கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மணி இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி மணி நேற்று முன்தினம் இறந்தார்.
இதையறிந்த பிரபல்லா மனமுடைந்து காணப்பட்டார். திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், விபத்தில் சிக்கி மாப்பிள்ளை இறந்து விட்டதால் திருமணம் தடைபட்டது. இந்த நிலையில் ஜெயா நந்தன் குடும்பத்தினர் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர். அப்போது பிரபல்லா வீட்டில் தனியாக இருந்தார். மணி இறந்த துக்கத்தில் அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.