தேசிய செய்திகள்

ஜி.எஸ்.எல்.வி. எப்-17 மாதிரி ராக்கெட் வைத்து சிறப்பு பூஜை; இஸ்ரோ விஞ்ஞானிகள் தரிசனம்

சுமார் 36,000 கிலோ மீட்டர் உயரத்தில் புவிநிலை சுற்றுவட்டப் பாதையில் 'இ.ஓ.எஸ்.-5' செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட உள்ளது.

திருப்பதி,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), 'இ.ஓ.எஸ்.-5' பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட் மூலம் செப்டம்பர் 4-ந் தேதி அதிகாலை விண்ணில் செலுத்துகிறது.

விண்வெளி ஆய்வு மையம்

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து அதிகாலை 2.55 மணிக்கு இந்த ராக்கெட் ஏவப்பட உள்ளது. வழக்கமான குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு பதிலாக, பூமியில் இருந்து சுமார் 36,000 கிலோ மீட்டர் உயரத்தில் புவிநிலை சுற்றுவட்டப் பாதையில் 'இ.ஓ.எஸ்.-5' செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட உள்ளது.

அதிநவீன கேமராக்கள்

இது இந்திய துணைக்கண்டத்தின் மீது நிலைத்திருக்கும் வகையில் செயல்பட உள்ளது. மல்டி-ஸ்பெக்ட்ரல் மற்றும் ஹைப்பர்-ஸ்பெக்ட்ரல் தொழில்நுட்பம் கொண்ட அதிநவீன கேமராக்கள் மூலமாக இந்தியாவின் நிலப்பரப்பை தொடர்ந்து கண்காணித்து, உடனுக்குடன் துல்லியமான படங்களை வழங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டுக்கான கவுண்ட்டவுன் இன்று மாலை தொடங்குகிறது.

விஞ்ஞானிகள் தரிசனம்

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ திரவ இயக்கத் திட்ட மைய இயக்குநர் வி. நாராயணன் மற்றும் விஞ்ஞானிகளுடன் சாமி தரிசனம் செய்து வழிபட்டார். அப்போது ஜி.எஸ்.எல்.வி. எப்-17 மாதிரி ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் மாதிரி ஆகியவை மூலவர் பாதத்தில் வைக்கப்பட்டு சிறப்புப் பூஜை செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT