தேசிய செய்திகள்

இதுவரை இல்லாத அளவு: மார்ச் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.42 லட்சம் கோடியாக உயர்வு

நாட்டில் இதுவரை இல்லாத அளவாக மார்ச் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.42 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால், கட்டுப்பாடுகள் ஏறத்தாழ தளர்த்தப்பட்டுள்ளன. இதனால், தொழிற்சாலை நடவடிக்கைகளும் கொரோனாவுக்கு முந்தைய கால அளவுக்கு உற்ப்த்தியை அதிகரித்துள்ளன. இதானால், ஏற்றுமதி, இறக்குமதியும் இயல்பான அளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக ஜி.எஸ்.டி வரி வசூலும் அதிகரித்து வருகின்றது.

கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.1,40,986 கோடி வசூலான நிலையில், பிப்ரவரி மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1.33 லட்சம் கோடியாக வசூலானது. இந்த நிலையில், மார்ச் மாத வசூல் ரூ.1.42 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. ஜி.எஸ்.டி வரி வசூலில் இது புதிய உச்சம் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நிதி அமைச்சகம் கூறுகையில், மார்ச் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ. ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 095 ஆகும். இதில், சி.ஜி.எஸ்.டி ரூ. 25,830 ஆகும், எஸ்.ஜி.எஸ்.டி ரூ. 32,378 ஆகவும் ஐ.ஜி.எஸ்.டி ரூ.74,470- ஆகும். செஸ் வரி மூலம் ரூ.9,414 கோடி கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வசூலான ஜி.எஸ்.டி தொகையை விட நடப்பு ஆண்டு 15 சதவீதம் கூடுதாலக கிடைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.